செய்திகள்
கோப்புபடம்

இளம்பெண்ணின் உறவினருக்கு ஆபாச இ-மெயில் அனுப்பிய வாலிபர் கைது

Published On 2021-08-05 18:15 IST   |   Update On 2021-08-05 18:15:00 IST
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் உறவினருக்கு ஆபாச இ-மெயில் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஈரோட்டில் உள்ள ஒரு நகை கடைக்கு வேலைக்கு சென்றார். அங்கு வேலை செய்து வந்த சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஷ் (30) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி விக்னேஷ் அந்த இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தினார். ஆனால் அந்த இளம்பெண் காதலை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து போன் செய்து விக்னேஷ் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் வெறுத்துப்போன அந்த இளம்பெண் தனது போன் எண்ணை மாற்றி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் அந்த இளம்பெண்ணின் சகோதரி மகன் செல்போன் எண்ணிற்கு இளம்பெண் குறித்து தவறான தகவலை அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விக்னேஷ் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணைக்கு வந்த விக்னேஷ் இனிமேல் எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன் என எழுதி கொடுத்து சென்றார்.

இந்நிலையில் மீண்டும் இளம்பெண்ணின் சகோதரி மகனுக்கு ஆபாச இமெயில் வந்தன. விக்னேஷ் மீது சந்தேகம் அடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள் மீண்டும் அவர் மீது புகார் அளித்தனர்.

இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விக்னேஷ் தான் ஆபாச மெயில் அனுப்பியது தெரியவந்தது .

இதையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

Similar News