செய்திகள்
ரூ.35 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் - அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
ஈரோடு மாவட்டத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் உள்பட 82 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மாருதி நகரில் பல்வேறு திட்டங்களுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. இங்கு ரூ.10 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் திண்டல் லட்சுமி நகரில் புதிய தார்சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். பின்னர் சோலார் பகுதியில் அமைய உள்ள ஈரோடு புறநகர் புதிய பஸ் நிலைய பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோலார் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 54 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் முதல் கட்டமாக 15 முதல் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்க முயற்சி செய்து வருகிறோம்.
அவ்வாறு சோலாரில் பஸ் நிலையம் வரும் போது ஏற்கனவே இருக்கிற பழைய பஸ் நிலையம் நகர பஸ் நிலையமாக செயல்படும். மேலும் புதிய பஸ் நிலையத்தையொட்டி ஒரு மாதிரி மார்க்கெட்டும் அமைக்கப்பட உள்ளது.
ஈரோட்டில் உள்ள மஞ்சள் வளாகம் 5 ஏக்கரில் செயல்படுகிறது. இதை 15 ஏக்கரில் விரிவுப்படுத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. விளையாட்டு துறை முன்னேற்றத்திற்காக ரூ.35 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான முறையில் விளையாட்டு மைதானம், புதிதாக சட்டக் கல்லூரி என்பது உள்பட 82 திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
போலீஸ்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். மொடக்குறிச்சி பகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இடம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
ஈரோட்டில் இருந்து செல்லக்கூடிய அனைத்து சாலைகளிலும் விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்து வருகிறோம். நீர்நிலை பகுதியையொட்டி வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமாக வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைப்பதற்கான ஏற்பாடு செய்திருக்கிறோம். தியாகி திருப்பூர் குமரன் பெயரில் ஒரு சாலை அமைக்கவும், ஈரோட்டில் பெரிய நூலகம் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
துணை நகரம், ஆட்டோ நகரம் இப்படி நிறைய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக தனியாக வாட்ஸ் அப் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 20-ந்தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வாட்ஸ் அப் செயலில் இதுவரை 117 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 93 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆய்வின்போது அமைச்சருடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநில நெசவாளர் அணி தி.மு.க. செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், மொடக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் குணசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.