செய்திகள்
பவானி அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி பூ வியாபாரி பலி - பெண் உள்பட 2 பேர் காயம்
பவானி அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி வியாபாரி இறந்தார். பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
பவானி:
ஈரோடு பழையபாளையம் கணபதி நகர் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பவானியை அடுத்த ஆப்பக்கூடலில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் நேற்று ஆப்பக்கூடலில் இருந்து ஈரோட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
பவானியை அடுத்த தளவாய்ப்பேட்டை நால்ரோடு அருகே வந்தபோது அந்தியூர் சங்கராபாளையம் பட்டக்காடு பகுதியை சார்ந்த தொழிலாளியான வேலுச்சாமி (வயது 29) என்பவர் ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது அவர் மீது மாணவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதுடன், தாறுமாறாக ஓடி சாலையோரம் பூக்கடை வைத்திருந்த தளவாய்ப்பேட்டை வினோபா நகரை சேர்ந்த செங்கோடன் (72), பழக்கடை நடத்தி வந்த கே.கே.நகரை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி புஷ்பா (40) ஆகியோர் மீதும் மோதியது. மேலும் விபத்தை ஏற்படுத்திய காரானது அந்தரத்தில் பறந்து சென்று அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்து அங்கிருந்த கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி தொங்கி கொண்டு நின்றது. இந்த விபத்தில் வேலுச்சாமி, செங்கோடன், புஷ்பா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செங்கோடன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்ததும் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் ரகுநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.