செய்திகள்
திருத்தங்கல் தி.மு.க. பிரமுகர் ரூ.12 கோடி மோசடி- பெண் அதிபர் புகார்
திருத்தங்கலைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மீது ரூ.12 கோடி மோசடி செய்ததாக சென்னை நிதி நிறுவன பெண் அதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர்:
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி. இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பலருக்கும் கடன் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில், சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் என்னிடம் அடிக்கடி பணம் வாங்கி செலுத்துவது வழக்கம். தற்போது ரூ.12 கோடி வரை பாக்கி வைத்துள்ளார்.
இதனை திருப்பி கேட்ட போது பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தி.மு.க. பிரமுகரை அழைத்து விசாரணை நடத்தினார். இன்று காலையும் அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
தி.மு.க. பிரமுகர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியாக இருந்தவர். சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.