செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர முன்னாள் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் வரவேற்று பேசினார். ராகுல்காந்தி பேரவை செயல் தலைவர் மகபூப் பாஷா, மாவட்ட சிறுபான்மைத்துறை தலைவர் ஷபிக் அஹமத், பொதுச்செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்யா கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.