அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே வேலம்பட்டி அடுத்த வேங்கானூர் பகுதியில் முன்பு பொன்னியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனால் சுற்றுவட்டார பகுதி பொது மக்கள், பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது திடீரென ஒரு நல்ல பாம்பு ஏறியது. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் அம்மன் சிலை மீது பாம்பு படமெடுத்து ஆடியது.
இதை பார்த்து அந்த வழியாக சென்ற சிலர் பரவசம் அடைந்தனர். உடனே இதுபற்றி கிராம மக்களுக்கு தெரியப்படுத்தினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூடியது. அம்மன் சிலை மீது பாம்பு இருக்கும் காட்சியை கண்டு பக்தி பரவசத்துடன், அம்மனை வழிபட்டனர்.
சிறிதுநேரம் கழித்து நாகப்பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.