செய்திகள்
குழந்தை திருமணங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Published On 2021-06-26 12:27 GMT   |   Update On 2021-06-26 12:27 GMT
குழந்தை திருமணம் நடந்தால் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது. 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பெற்றோர், திருமணம் செய்து வைப்பதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளன. குழந்தைகள் திருமணத்தை தடுக்க சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் போலீசார் குழு அமைத்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் கொரோனா ஊரடங்கின் போது குழந்தை திருமணங்கள் தொடர்பாக அதிக அளவில் புகார்கள் வந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் சென்று அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பாத சிறுமிக்கும், 21 வயது நிரம்பாத வாலிபருக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களது உறவு முறை விட்டுவிடக்கூடாது என்பதற்காக 18 வயது நிரம்பாத சிறுமிக்கு உறவுமுறை வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் குழந்தை திருமணம் தொடர்பாக தகவல் வந்த உடனே விரைந்து சென்று திருமணத்தை நிறுத்தியுள்ளோம். குழந்தை திருமணம் நடந்தால் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த மாதத்தில் மட்டும் 8 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
Tags:    

Similar News