செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மனித குரங்கு ஜோடியை படத்தில் காணலாம்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கு குட்டி ஈன்றது

Published On 2021-06-10 19:40 GMT   |   Update On 2021-06-10 19:40 GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் மனித குரங்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்றதால் பூங்காவில் உள்ள டாக்டர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வண்டலூர்:

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1,265 ஏக்கர் பரப்பில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து வசதிகளுடன் இயற்கை சூழலில் 170 வகையிலான 2 ஆயிரத்து 200 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. உயிரியல் பூங்காவில் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண், பெண் என 2 மனித குரங்குகள் உள்ளன.

பூங்காவில் நுழைந்ததுமே பார்வையாளர்கள் பார்வையில் படுவது இந்த மனித குரங்குகளின் இருப்பிடம் தான். இந்த 2 மனித குரங்குகளுக்கும் ஒரு செயற்கை குகை உருவாக்கப்பட்டு அதில் அடைக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு சேட்டைகளை செய்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும், மேலும் அதனுடைய இருப்பிடத்தில் உள்ள ஊஞ்சலில் ஏறி கால் மேல் கால் போட்டு அமர்ந்து பல்வேறு சேட்டைகளை செய்து பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

இந்த 2 மனித குரங்குகளும் தர்பூசணி, லஸ்ஸி போன்றவற்றை விரும்பி சாப்பிடும், மேலும் ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் உள்பட பல்வேறு பழங்களை தினந்தோறும் உணவாக பூங்கா நிர்வாகம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்காவை பொதுமக்கள் சுற்றி பார்க்க தடைவிதித்து மூடப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் பூங்காவில் அமைதியான சூழல் மற்றும் பார்வையாளர்கள் தொந்தரவு இல்லாத காரணத்தினால் பூங்காவில் உள்ள சிங்கப்பூர் மனிதகுரங்கு ஜோடி கவுரி, கோம்பி ஆகிய இரண்டுக்கும் காதல் மலர்ந்து ஒன்றோடு ஒன்று இணை சேர்ந்த காரணத்தால் 230 நாள் முதல் 240 நாள் கர்ப்ப காலம் முடிந்து சில தினங்களுக்கு முன்பு மனித குரங்கு கவுரி அழகான மனித குரங்கு குட்டி ஒன்றை ஈன்றது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் மனித குரங்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்றதால் பூங்காவில் உள்ள டாக்டர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் புதிதாக பிறந்த மனித குரங்கு குட்டியை பூங்கா டாக்டர்கள் மிகுந்த கவனத்துடன் அதனுடைய இருப்பிடத்தில் நல்ல முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தற்போது மனித குரங்கு குட்டியும், தாயும் ஆரோக்கியத்துடன் உள்ளன.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் அன்பை விலங்குகளிடம் நேரடியாக வெளிப்படுத்துவதற்கும், விலங்குகளை பற்றி தகவல்களை நேரடியாக தெரிந்து கொள்வதற்கும் இது வழிவகை செய்கிறது. பூங்காவில் விலங்குகளை பராமரிப்பதற்காக போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பூங்கா நிர்வாகம் இந்த திட்டத்தை கொண்டு வந்தது. ஏற்கனவே இந்த திட்டத்தில் பிரபல திரைப்பட நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்திக் உள்ளிட்டோர் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள் உள்பட பலரும் விலங்குகளை தத்தெடுத்து பராமரித்து உள்ளனர்.

இந்த திட்டத்தில் பொதுமக்கள் ரூ.100 முதல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தி விலங்குகளை ஒரு நாள் முதல் வருடக்கணக்கில் தத்து எடுக்கலாம் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்ததோடு, பிரபல சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் உள்பட அனைவருக்கும் பூங்கா நிர்வாகம் சார்பில் விலங்குகளை தத்தெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் தத்தெடுப்பு பற்றிய வவரங்கள் பூங்கா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News