கொரோனா பரவாமல் தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்- திமுக வலியுறுத்தல்
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற தி.மு.க. தலைவர் சிவா எம்.எல்.ஏ. உள்ளாட்சித்துறை செயலர் வல்லவனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நகராட்சி, கொம்யூன் வார்டு எல்லை மறுசீரமைப்பு வரைவு நகலில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது.
உள்ளாட்சி வார்டுகள் சராசரி வாக்காளர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து பிரிக்கப்படவில்லை. பூலோக ரீதியாகவும் எல்லைகளை ஒழுங்குப்படுத்தும் வகையிலும் பிரிக்கப்படவில்லை. வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்தான் கவுன்சிலர்களின் சேவை தரமாக இருக்கும்.
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஏற்கனவே இருந்த கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை 18-ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு பிரிக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை சராசரியாக 6500 என உள்ளது.
ஆனால், 6350 வாக்காளர்கள் மட்டுமே உள்ள சுல்தான்பேட்டை கிராம பஞ்சாயத்து இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை கிராமத்தில் உள்ள அனைத்து பூத்துகளையும் ஒரே கிராம பஞ்சாயத்தாக வரையறை செய்து அறிவிக்க வேண்டும். மேலும், கிராம பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் ஆகிய 2 பதவிகளையும் பொது பதவிகளாகவும் அறிவிக்க வேண்டும்.
புதுவை முழுவதும் அனைத்து வார்டுகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை சராசரியாக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை இருக்கும் வகையிலும், பூலோகா ரீதியில் ஒன்றாக இருக்கும் வகையிலும் பிரிக்க வேண்டும்.
மேலும் அந்தந்த பகுதி மக்கள் என்னென்ன ஆலோசனைகளை தெரிவித்து இருந்தார்களோ அக்கருத்துக்கள் அனைத்தையும் அமல்படுத்திய பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.
ஏற்கனவே சட்டமன்ற தேர்தலும் கொரோனா தொற்று பரவலுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதுபோல் உள்ளாட்சி தேர்தலும் கொரோனா தொற்று பரவலுக்கு காரணமாகிவிடக்கூடாது. மேலும் கொரோனா தொற்று 3-ம் அலை, 4-ம் அலை பரவலும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே வல்லுனர்களின் கருத்தை பெற்றும், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்பு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும். இவைகளை வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை தள்ளிப்போகச் செய்யாமல், உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே அனைத்து சீர்திருத்தங் களையும் மேற்கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறந்ட்டுள்ளது.
சந்திப்பின்போது தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் முகம்மது அசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கலிமுல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.