செய்திகள்
உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க சமூக இடைவெளி விட்டு நின்ற பொதுமக்களை காணலாம்

ஈரோடு அரசு மகளிர் பள்ளிக்கூட வளாகத்தில் உழவர் சந்தை இயங்க தொடங்கியது

Published On 2021-05-22 16:18 IST   |   Update On 2021-05-22 16:18:00 IST
ஈரோடு அரசு மகளிர் பள்ளிக்கூட வளாகத்தில் உழவர் சந்தை இயங்க தொடங்கியது. உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதியில் சம்பத்நகர், பெரியார் நகர் பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வந்தன. இங்கு கூட்ட நெரிசலை தவிர்க்க குமலன் குட்டையில் தற்காலிக உழவர் சந்தை தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டமும் அதிகரித்தது,

எனவே இந்த கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் உழவர் சந்தை இயங்கும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அறிவித்தார்.

அதன்படி நேற்று முதல் அரசு மகளிர் பள்ளிக்கூட வளாகத்தில் உழவர் சந்தை இயங்க தொடங்கியது. உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

சந்தைக்குள் வரும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சாதாரண வெப்பநிலை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் கை சுத்தம் செய்யும் திரவம் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே சந்தைக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை உழவர் சந்தை அரசு பள்ளிக்கூட மைதானத்தில் இயங்கும்.

அதுவரை பெரியார் நகர், சம்பத் நகர் உழவர் சந்தைகள் இயங்காது. குமலன்குட்டையில் உழவர் சந்தை இனி செயல்படாது என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.

Similar News