விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய வாலிபர்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள காரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர் களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுரேஷ்குமாரையும் அவர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சுரேஷ்குமார் தனது காதலில் உறுதியாக இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டை சேர்ந்தவர்கள் சம்பவத்தன்று சுரேஷ் குமாரை சரமாரியாக தாக்கி மிரட்டியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் அவர் காயமடைந்தார்.
இதுதொடர்பாக சுரேஷ்குமார் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து சுரேஷ் குமார் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். வளாகத்தில் நின்றிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த போலீசார் அவரை உடனே விருது நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் சுரேஷ்குமார் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தன்னை தாக்கிய காதலியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கணடித்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக சுரேஷ்குமார் போலீசில் தெரிவித்தார். இதன் அடிப்படையில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.