செய்திகள்
தற்கொலை

கோத்திகிரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2021-05-21 12:37 GMT   |   Update On 2021-05-21 12:37 GMT
கோத்தகிரி அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே உள்ள கொட்டகம்பை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). கூலித் தொழிலாளி. இவரும், கொட்டநள்ளி கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பிரியதர்ஷினி, மணிகண்டனை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தம்பதியினர் கொட்டகம்பையில் வசித்து வந்தனர்.

நேற்று காலை பிரியதர்ஷினி நீண்ட நேரம் தூங்கிகொண்டிருந்ததை மணிகண்டன் கண்டித்ததாகவும், காலையில் எழுந்து வேலை செய்யவேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் மணிகண்டனின் பெற்றோர் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டனர். காய்கறி வாங்குவதற்காக மணிகண்டனும் வெளியே சென்றுவிட்டார். கணவர் திட்டியதால் மனமுடைந்த பிரியதர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டன், மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து இளம்பெண்ணின் தந்தை மனோகரன் கொடுத்த புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிரியதர்ஷினிக்கு திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால், விசாரணை நடத்த குன்னூர் சப்-கலெக்டர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண், திருமணமான 7 மாதத்திற்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை யும்,பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News