செய்திகள்
பள்ளி தலைமையாசிரியர் பிரேம்குமாரி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை

Published On 2021-05-20 23:41 IST   |   Update On 2021-05-20 23:41:00 IST
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தை அரசு பள்ளி தலைமை ஆசிரியை கலெக்டரிடம் வழங்கினர்.
விருதுநகர்:

வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரிைய பிரேம்குமாரி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தை கலெக்டர் கண்ணனிடம் வழங்கினார்.

அதேபோல விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி பிரதீபா மற்றும் அவளது தம்பி 4-ம் வகுப்பு மாணவன் தீபக் ஆகிய இருவரும் தாங்கள் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.2ஆயிரத்தை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக கலெக்டர் கண்ணனிடம் வழங்கினர்.

நிவாரண நிதி வழங்கிய பள்ளி மாணவியையும், தலைமை ஆசிரியையும் கலெக்டர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.



ராஜபாளையத்தை அடுத்த கலங்காபேரியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் கவிநேஷ் (வயது16). மாற்றுத்திறனாளியான இவன் அரசு மூலம் மாதந்தோறும் கிடைத்த ஊனமுற்றோர் உதவி தொகையை சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.12 ஆயிரத்தை, அரசு நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளியாக இருப்பதால் தாசில்தார் அலுவலகம் வர முடியாது என்பதை தெரிந்து கொண்ட, ராஜபாளையம் தாசில்தார் ரெங்கநாதன் நேரடியாக சிறுவனின் வீட்டுக்கு சென்று ரூ.12 ஆயிரத்திற்கான வரைவோலையை பெற்றுக் கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனி பகுதியில் வசித்து வரும் திருவேங்கடத்தின் மகள் சிவானி பிரியா. 7-ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி ஆன்லைன் வகுப்பிற்கு புதிய செல்போன் வாங்க வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாசில்தார் சரவணனிடம் வழங்கினார்.

Similar News