செய்திகள்
சாத்தூர் ராமச்சந்திரன்

ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் தகவல்

Published On 2021-05-15 08:27 GMT   |   Update On 2021-05-15 08:27 GMT
நோய் தொற்று உள்ளவர்கள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றி வருவதால் பல மடங்கு பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

பாலையம்பட்டி:

அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய பகுதியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரசு மருத்துவர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆகியோருடன் கொரோனா தடுப்பு குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-


கடந்த ஒரு வார காலமாக அருப்புக்கோட்டை நகர் மற்றும் ஒன்றிய பகுதியில் நடத்திய ஆய்வில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உயிர் பலியும் அதிகமாக இருந்து வருகிறது.

இதனை தடுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நோய் தொற்று உள்ளவர்கள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றி வருவதால் பல மடங்கு பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த கொரோனா நோய் கண்டறியப்பட்ட வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு அவர்கள் வெளியே செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முழு ஊரடங்கின்போது தேவையில்லாமல் வாகனங்களில் சுற்நுபவர்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு அரசு சுகாதாரத்துறை மருத்துவர்கள் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து அரசு அலுவலர்களும் ஒன்றிணைந்து அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை தடுக்கவும், நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News