செய்திகள்
கோப்புப்படம்

டி.என்.பாளையம் அருகே தண்ணீரில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2021-05-15 07:13 GMT   |   Update On 2021-05-15 07:13 GMT
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே தண்ணீரில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ஜீவா. இவர்களது மகன் ரகுநாத் (வயது 15), அந்தியூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணக்கம்பாளையம் கரும்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

சம்பவத்தன்று கருப்பாறை ஓடையில் துணி துவைக்க உறவினர்களுடன் சென்ற ரகுநாத் ஓடையில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைகண்டு உறவினர்கள் சத்தம் போட்டனர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ரகுநாத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரகுநாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News