செய்திகள்
தாளவாடி அருகே பலத்த சூறாவளிக்காற்றால் 1,500 வாழைகள் முறிந்தன
தாளவாடி அருகே வீசிய சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1,500 வாழைகள் சாய்ந்தன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் தாளவாடியை அடுத்த சூசைபுரம், மல்லன்குழி, அருள்வாடி, தமிழ்புரம், ஆசனூர், திம்பம் ஆகிய பகுதியில் சுமார் 1 மணிநேரம் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பின.
இந்தநிலையில் பலத்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திகனாரை ஜோரகாடு பகுதியை சேர்ந்த இளவேந்தன் என்பவரின் தோட்டத்தில் 1,500 வாழை மரங்கள் முறிந்தன. சேதமடைந்த வாழைகளை கணக்கெடுத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று இளவேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.