செய்திகள்
2 வீடுகளில் நகை, பணம் திருடியவர் கைது- மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
காரைக்கால் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த மேலகாசாகுடியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள், 7 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசா குடியை சேர்ந்த பரத்குமார் என்பவர் வீட்டிலும் மடிக் கணினி, வெள்ளிக்கொலுசு, ரூ. 5 ஆயிரம் திருடு போனது.
இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளில் பதிவாகி இருந்த தடயங்களை விசாரணை நடத்தினர். அப்போது கரூர் குளித்தலை சுக்கம்பட்டியை சேர்ந்த தர்மதுரை (வயது 30), தனது கூட்டாளிகளான முரளி (24), செல்லதுரை (25) ஆகியோருடன் சேர்ந்து 2 வீடுகளிலும் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து மயிலாடுதுறை செம்பனார்கோவில் பகுதியில் பதுங்கி இருந்த தர்மதுரையை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான தங்கநகைகள், பணம், லேப்டாப், செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள முரளி, செல்லத்துரையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்காலில் கடந்த சில மாதங்களில் திருடு போன 20 செல்போன்களை, சிறப்பு அதிரடிப்பிரிவு போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.