செய்திகள்
சமூக இடைவெளியை மறந்து வங்கி, பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவிந்த மக்கள்.

வங்கி, அரசு அலுவலகங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படாத நிலை - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Published On 2021-04-27 08:07 IST   |   Update On 2021-04-27 08:07:00 IST
மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நடைமுறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

மாவட்டத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ தொட்டுவிட்டநிலையில் மாவட்டத்தில் நகர்ப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் நோய்கள் பரவல் அதிகரிக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரித்து வருகிறது.

அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளும் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிலை தொடர்கிறது.

அதிலும் குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு துறைத்தலைவர் பதிவு அலுவலகத்திற்கு வெளியேயும், உள்ளேயும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதும் அவசியம் என்றும் அனைத்து பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனாலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ளேயும், வெளியேயும் பத்திர பதிவுத்துறை தலைவரின்அறிவுறுத்தலை அதிகாரிகள் முறையாக பின்பற்றப்படாத நிலை நீடிக்கிறது.

பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வெளியே பெரும் கூட்டம் கூடி இருக்கும் நிலையில் அதனை தவிர்க்க மாவட்ட பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி கிளைகளில் வேலைநேரம் குறைக்கப்பட்டு விட்டது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. நேற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் வாசல் வரை வாடிக்கையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு இருந்ததை காணமுடிந்தது.

வங்கி நிர்வாகம் இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவிட்டாலும் குறைந்தபட்சம் காவலர்கள் மூலமாவது வங்கி வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று செல்லுமாறு அறிவுறுத்த வேண்டியது அவசியமாகும்.

முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை வங்கிகள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டியதும் அவசியமாகும்.

Similar News