செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே தூக்குபோட்டு முதியவர் தற்கொலை
கிருமாம்பாக்கம் அருகே தூக்குபோட்டு தொங்கிய முதியவர் கயிறு அறுந்ததில் வாய்க்காலில் விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:
பாகூர் அருகே மேல்பரிக்கல்பட்டு பால்வாடிவீதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது44). இவர் பரிக்கல்பட்டு ரோட்டில் உள்ள முள்ளோடை சாராயக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் ஊரடங்கு என்பதால் சாராயக்கடையை மூடிவிட்டு இரவு வீட்டுக்கு வந்தார். நேற்று சாராயக்கடையை பார்வையிட நடராஜன் சென்றார்.
அப்போது முள்ளோடை சோதனைச்சாவடி அருகே உள்ள வாய்க்காலில் முதியவர் ஒருவர் கவிழ்ந்த நிலையில் கிடப்பதை நடராஜன் கண்டார்.
இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது தன்னிடம் தினமும் சாராயம் குடிக்க வருபவர் என்பது தெரியவந்தது. பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் அந்த முதியவர் தினமும் சாராயம் குடித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அந்த முதியவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த அந்த முதியவர் அருகில் உள்ள மரத்தில் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கியுள்ளார்.
பாரம் தாங்காமல் கயிறு அறுந்ததால் வாய்க்காலில் விழுந்து அந்த முதியவர் இறந்து போனது தெரியவந்தது.
இதுகுறித்து நடராஜன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அந்த முதியவர் யார்-எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.