தாய்-தந்தை இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு அருள்படையாட்சி வீதியை சேர்ந்தவர் பிலீப் (வயது40). இவரது அக்காள் விக்டோரியா (48).
பிலீப் வீட்டின் முதல் மாடியிலும் அவரது அக்காள் விக்டோரியா தாய்-தந்தையுடன் வீட்டின் தரைதளத்தில் வசித்து வந்தார். விக்டோரியா திருமணம் செய்து கொள்ளாமல் வயதான தனது பெற்றோரை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் விக்டோரியாவின் தந்தையும், பிப்ரவரி மாதம் தாயும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். பெற்றோர் அடுத்தடுத்து இறந்து போனதால் விக்டோரியா சோகத்துடன் இருந்து வந்தார். அவருக்கு பிலீப் ஆறுதல் கூறி வந்தார். எனினும் விக்டோரியா தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை.
எனவே தற்கொலை செய்து கொள்ளப்போவதாக உறவினர்களிடம் அடிக்கடி கூறி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வரை விக்டோரியா தங்கியிருந்த வீட்டின் கதவு திறக்கப்படாததால் மாடியில் வசித்த அவரது சகோதரர் பிலீப் சந்தேகமடைந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மின் விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தனது அக்காள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.