புதுவை ஓட்டலில் சென்னை தொழிலதிபர் மயங்கி விழுந்து பலி
புதுச்சேரி:
புதுவை ஓட்டலில் தங்கியிருந்த சென்னை தொழிலதிபர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
சென்னை முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது55). இவர் ஆர்த்தோபடிக் மருத்துவத்துக்கு தேவையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கீதாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்னர்.
ஜெகநாதன் தொழில் சம்பந்தமாக புதுவைக்கு அடிக்கடி வருவது வழக்கம். அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகநாதன் புதுவை அண்ணாசாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்து மருந்து பொருட்கள் விற்பது தொடர்பாக விற்பனை பிரதிநிதிகளுடன் பேசி வந்தார்.
இந்த நிலையில் ஓட்டலில் தங்கியிருந்த ஜெகநாதன் நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த ஊழியர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெகநாதன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் சத்யபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.