செய்திகள்
புதுச்சேரி

புதுவையில் பிளஸ்- 2 மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளி கல்வித்துறை உத்தரவு

Published On 2021-04-24 06:33 GMT   |   Update On 2021-04-24 06:33 GMT
பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பிளஸ்-2 மாணவர்களுக்கு எந்த வடிவம் அல்லது முறையிலும் வகுப்புகளை நடத்தக் கூடாது.

புதுச்சேரி:

கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருவதால் பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

எனவே பிளஸ்-2 மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்தக் கூடாது. எந்த நோக்கத்திற்காகவும் மாணவர்களை பள்ளிக்கு வர அறிவுறுத்த கூடாது என புதுச்சேரி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ அனைத்து மேல் நிலைப்பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக தேர்வுத்துறை இயக்குனரின் அறிவுறுத்தலின்படி மே 5-ந்தேதி முதல் 31-ந் தேதி வரையிலும் நடைபெறுவதாக இருந்த தமிழக கல்வி வாரியத்தின் கீழ பயின்ற பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

திருத்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு தமிழக கல்வி வாரிய இயக்குனரால் தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும்.

பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பிளஸ்-2 மாணவர்களுக்கு எந்த வடிவம் அல்லது முறையிலும் வகுப்புகளை நடத்தக் கூடாது.

பிளஸ்-2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எந்த நோக்கத்துக்காகவும் பள்ளிக்கு வர அறிவுறுத்தக் கூடாது.

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவி வரும் நிலையில் பள்ளிகளில் வகுப்புகள், நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகள், படிப்பில் சுமாரான மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு, டியூசன் உள்ளிட்ட எந்த கல்வி நடவடிக்கைகளையும், எந்த வடிவத்தில் அல்லது முறையிலும் நடத்தக்கூடாது.

இவற்றை மிகவும் கண்டிப்பபாக கடை பிடிக்க வேண்டும். இது தொடர்பான விதி மீறல் மற்றும் புகார்கள் தீவிரமாக பார்க்கப்படும். விதி மீறல்களுக்கு குறிப்பிட்ட பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News