செய்திகள்
கோப்புப்படம்

ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை

Published On 2021-04-18 20:56 GMT   |   Update On 2021-04-18 20:56 GMT
ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் மாதையன். சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். தற்போது இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான காரிமங்கலத்திற்கு சென்றார்.

நேற்று காலை மாதையன் வீட்டில் மேல் மாடி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மாதையனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

அப்போது மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து, மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 150 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News