செய்திகள்
தளி அருகே ரவுடி கொலையில் 2 பேர் கைது
தளி அருகே ரவுடி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள டி.குருபரப்பள்ளியை சேர்ந்தவர் நரேஷ்பாபு (வயது 28). பிரபல ரவுடி. இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 12-ந் தேதி இரவு நரேஷ்பாபு சிக்கன் வாங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நரேஷ்பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 20ந் தேதி தளி ஜெயந்தி காலனியை சேர்ந்த உமேஷ் என்பவர் கொலையில் தொடர்புடைய நரேஷ்பாபுவை பழிக்கு பழி வாங்கும் வகையில் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த தளி ஜெயந்தி காலனியை சேர்ந்த லட்சுமிபதி (26), ஆசிக் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.