செய்திகள்
காதணி விழாவுக்கு முறைப்படி அழைக்காததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வேதாரண்யம் அருகே தம்பி வீட்டில் இருந்து காதணி விழாவுக்கு முறைப்படி அழைக்காமல் தபாலில் அழைப்பிதழ் அனுப்பியதால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அண்ணாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது52). ஜெயலட்சுமியின் தம்பி குழந்தைக்கு காதணி விழா நடைபெற்றது. இதற்காக ஜெயலட்சுமி தம்பி அடித்த அழைப்பிதழில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் பெயர் இல்லை என கூறப்படுகிறது. மேலும் அழைப்பிதழை ஜெயலட்சுமிக்கு நேரில் வழங்காமல் தபாலில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ஜெயலட்சுமி தனது வீட்டின் பின்புறம் உள்ள முந்திரி தோப்புக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதணி விழாவுக்கு முறைப்படி அழைக்காததால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வாய்மேடு பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.