செய்திகள்
முகக்கவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது எடுத்த படம்.

முகக்கவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-04-12 10:55 GMT   |   Update On 2021-04-12 10:55 GMT
புதுச்சேரி கடற்கரை சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி:

நாடு முழுவதும் தற்போது கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும். இல்லையென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக சுகாதாரத்துறை சார்பில், பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதேபோல் புதுச்சேரி கடற்கரை சாலையில் லே கபே முன்பு நேற்று சிறப்பு முகாம் நடந்தது. இதில் செவிலியர்கள் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். அத்துடன் முகக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கி கூறினர். மேலும் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News