செய்திகள்
வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்திக்காக பாத்திகள் அமைக்கப்பட்டு உள்ள காட்சி.

வேதாரண்யத்தில் சுட்டெரிக்கும் வெயில்: உப்பு உற்பத்தி தீவிரம்

Published On 2021-04-11 13:29 GMT   |   Update On 2021-04-11 13:29 GMT
வேதாரண்யத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி தீவிரமடைந்து உள்ளது. தற்போது ஒரு டன் உப்பு ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மழைக்காலம் முடிந்தவுடன் கடந்த பிப்ரவரி மாதம் உப்பு பாத்திகள் சரிசெய்யப்பட்டு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒரு டன் உப்பு ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் 10 மணி வரை பணியில் ஈடுபடுகின்றனர்.

ஒரே நேரத்தில் அதிக அளவு உற்பத்தி பணிகள் நடைபெறுவதால் ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து வேலை கிடைப்பதால் இந்த தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News