செய்திகள்
வேளாங்கண்ணியில் லாட்ஜில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வேளாங்கண்ணியில், லாட்ஜில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ். இவரது மகன் ஜார்ஜ் லூர்துராஜ்(வயது 24). இவர், கடந்த 7-ந் தேதி வேளாங்கண்ணிக்கு வந்து ஒரு லாட்ஜில் தங்கி உள்ளார்.
நேற்று காலையில் விடுதியை காலி செய்வதற்காக பணியாளர்கள் ஜார்ஜ் லூர்துராஜ் தங்கி இருந்த அறையின் கதவை தட்டினர். அப்போது உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பணியாளர்கள் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அறையில் உள்ள கழிவறையில் ஜார்ஜ் லூர்துராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்ஜ் லூர்துராஜ் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.