செய்திகள்
நாகையில் ஆதரவற்றோர்களுக்காக வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டி - பொதுமக்கள் பாராட்டு
நாகையில் ஆதரவற்றோர்களுக்காக குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டி தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை நகரத்திற்குட்பட்ட தேசிய மேல்நிலைப்பள்ளி, சவுந்தரராஜபெருமாள் கோவில் தென் மடவிளாகம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அன்பு சுவர் என்ற பெயரில் பொதுமக்களால் கொடுக்கப்படும் பழைய மற்றும் புதிய துணிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த அன்பு சுவரில் வைக்கப்படும் துணிகளை ஆதரவற்றோர்கள் மற்றும் யாசகம் தேடுபவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்தநிலையில் நாகை வெளிப்பாளையம் பகுதிகளில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் சமூக ஆர்வலர் ஒருவர் குளிர்சாதன பெட்டி வைத்துள்ளார்.
இந்த குளிர்சாதன பெட்டியில் பொதுமக்கள் தங்களால் முடிந்த உணவுகளை வைத்து விட்டு செல்கின்றனர். அவர்கள் வைக்கும் உணவு மற்றும் பொருட்களை ஆதரவற்றோர்கள் எடுத்து சாப்பிட்டு பயன் அடைந்து வருகின்றனர்.
இந்த குளிர்சாதன பெட்டி ஆதரவற்றோர்களுக்கு உதவும் வகையில் வைக்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.