செய்திகள்
பலி

தா.பழூரில் குட்டையில் மூழ்கி சிறுமி பலி

Published On 2021-04-03 10:51 GMT   |   Update On 2021-04-03 10:51 GMT
தா.பழூரில் குட்டையில் மூழ்கி சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம். இவருடைய வீட்டிற்கு, அவரது உறவினர் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கீரங்குடி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தியின் மகளான விஷாலி(வயது 13) வந்திருந்தார். நேற்று விஷாலியும், அப்பகுதியை சேர்ந்த சிறுமிகளும் சேர்ந்து, பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள பனங்குட்டை என்ற குட்டைக்கு குளிக்க சென்றனர். அப்போது விஷாலி ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்த விஷாலியை, மற்ற சிறுமிகள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் விஷாலி தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.

இதையடுத்து சிறுமிகள் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்கள் அங்கு வந்து குட்டையில் தேடினர். சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் விஷாலியை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷாலி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தா.பழூா் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News