ஈரோட்டில் இன்று வாகன சோதனையில் ரூ.1.70 கோடி சிக்கியது
ஈரோடு:
ஈரோடு கதிரம்பட்டி வாய்க்கால்மேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனில் சோதனை நடத்தியபோது ரூ.1 கோடியே 70 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த பணம் ஈரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர். மேலும் வங்கியில் இருந்து ரூ.2 கோடியே 80 லட்சம் பணம் கொண்டு வந்ததாகவும், வங்கி கிளைகளுக்கு கொடுத்தது போக மற்ற கிளைகளுக்கு இந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே வேனில் கொண்டு வந்த ரூ.1 கோடியே 70 லட்சத்துக்கு ஆவணம் இல்லாததாலும், மேலும் பணம் கொண்டு செல்ல ஒரு வழியில் அனுமதி பெற்று மாற்று வழியில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரூ.1 கோடியே 70 லட்சத்தை பறிமுதல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.