செய்திகள்
விபத்து

கலசபாக்கம் அருகே லாரி மோதி தொழிலாளி மகனுடன் பலி

Published On 2021-04-03 01:07 IST   |   Update On 2021-04-03 01:07:00 IST
கலசபாக்கம் அருகே புனிதவெள்ளியையொட்டி தேவாலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மனைவி கண் முன்பே லாரி மோதி தொழிலாளி மகனுடன் பரிதாபமாக இறந்தார்.
கலசபாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியை அடுத்த ஒரவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாஸ் (வயது 32), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அல்போன்ஸ் (28) என்ற மனைவியும், சேவன் என்ற 5 வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு போளூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதற்காக தாஸ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தையுடன் போளூர் நோக்கி செங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேல்வன்னியனூர் அருகில் 3 புளியமரம் என்ற இடத்தில் போளூரில் செங்கல் சூளைக்கு மண் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தாஸ் மற்றும் சேவன் ஆகிய இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி மனைவி கண் முன்பாகவே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Similar News