செய்திகள்
தாக்குதல்

சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 14 பேர் கைது

Published On 2021-04-02 15:22 GMT   |   Update On 2021-04-02 15:22 GMT
சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
அச்சரப்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் தேன்பாக்கம் அருகே ஜி.எஸ்..டி. சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று மாலை வேனில் வந்த 16 பேர் சாப்பிட்டுள்ளனர். அவர்களிடம் ஓட்டல் ஊழியர்கள் சாப்பிட்டதற்கு பணம் கேட்டனர்.

அப்போது அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டல் ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வேனில் வந்தவர்கள் ஓட்டல் ஊழியர்களையும், அதன் உரிமையாளரையும் சரமாரியாக தாக்கி விட்டு வேனில் தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசாருக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுராந்தகம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (29), நவீன்குமார் (27), பிரபாகரன், (26), பிரபு (33), பிரவீன்ராஜ் (21), பிரகாஷ் (36), தமிழரசன் (33), மூர்த்தி என்கிற சுந்தரமூர்த்தி (33), ஹரிராஜ் (33), நித்தியானந்தம் (29), நெல்லிமேடு பகுதியை சேர்ந்த வசந்தராஜ் (28), சுரேஷ் (28), ஓட்டேரியை சேர்ந்த சரவணன் (34), ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் (35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்களை கைது செய்து மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News