செய்திகள்
ஆரணியில் விற்பனையாளரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்
ஆரணியில் விற்பனையாளரிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஆரணி:
ஆரணி கொசப்பாளையம் ரூப்சிங் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 45). இவர் ஆரணியில் உள்ள தனியார் மசாலா ஏஜென்டிடம் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் போளூர் பகுதியில் வேனில் பொருட்களை விற்பனை செய்து விட்டு மீண்டும் ஊர் திரும்பினார்.
அப்போது ஆரணி - சைதாப்பேட்டை அருகே ஆரணி தேர்தல் பறக்கும் படையினர் தோட்டக்கலை உதவி அலுவலர் கோவிந்தன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் குழுவினர் சோதனை செய்தபோது தனசேகரிடம் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 160 இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து ஆரணி தாசில்தார் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கருவூலத்தில் பணம் செலுத்தப்பட்டது.