செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படும்- கலெக்டர் தகவல்

Published On 2021-03-23 19:05 IST   |   Update On 2021-03-23 19:05:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு முகாம் நடத்த கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பரவிய கொரோனா மாவட்டத்தில் உள்ள மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியது. பின்னர் படிபடியாக கொரோனாவின் தாக்கம் குறைந்தது. ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தின வேல், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி, குடும்பநலத்துறை துணை இயக்குனர் டாக்டர் யோகவதி மற்றும் மருத்துவ கல்லூரி கொரோனா பிரிவு பொறுப்பாளர் டாக்டர் சூரியநாராயணன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.. ஒரு வீட்டில் 3 பேரோ, அல்லது ஒரு தெருவில் 3 பேரோ கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டால் அந்த பகுதியி்ல் சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய அரசு மருத்துவமனையை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம். மேலும் கொரோனா நோயாளிகளை 7 நாட்கள் வரை மருத்துவமனையில் வைத்திருந்து முழுவதும் குணமடைந்த பின்னரே அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News