செய்திகள்
கோப்புபடம்

பவானி அருகே வாய்க்காலில் குதித்த தொழிலாளி தலையில் அடிபட்டு பலி

Published On 2021-03-21 13:21 GMT   |   Update On 2021-03-21 13:21 GMT
பவானி அருகே வாய்க்காலில் குதித்த தொழிலாளி தலையில் அடிபட்டு பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:

சேலம் மாவட்டம் வெள்ளக்கல்பட்டி அருகே உள்ள பாப்பான் ஏரித்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் இனாயத் (வயது 52). இவருடைய மனைவி நஸ்ரின் (45) இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இனாயத் மனைவியை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகரில் தங்கிக்கொண்டு, அங்குள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று இனாயத் அந்த பகுதியில் செல்லும் கோணவாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது கரையில் இருந்து அவர் வாய்க்காலுக்குள் குதித்தார். தண்ணீர் குறைவாக சென்றதால், வாய்க்காலின் கான்கிரீட் தளத்தில் தலை மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மயக்கமடைந்த நிலையில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

அருகே குளித்துக்கொண்டு இருந்தவர்கள் இதைப்பார்த்து, உடனே அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News