செய்திகள்
வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி கொண்டு வந்த காட்சி.

புதுச்சேரியில் நிதி நிறுவனம், பைனான்சியர் வீடுகள் உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

Published On 2021-03-21 03:13 GMT   |   Update On 2021-03-21 03:13 GMT
புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகள் உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்தவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கொடுப்பதை தடுக்கவும் தேர்தல் பறக்கும் படையினர் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம், பட்டுவாடா செய்ய தனியார் நிதி நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்தனர். தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவர்கள் தனியார் நிதி நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகளை ரகசியமாக கண்காணித்தனர். இதையடுத்து நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதன்படி புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பைனான்ஸ், நிறுவனங்கள் மற்றும் போர்வால் வட்டி கடை ஆகியவற்றில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல் புதுவை இளங்கோ நகர், எல்லைபிள்ளைச்சாவடி பெரியார் நகர், லாஸ்பேட்டையில் உள்ள 4 பைனான்சியர் வீடுகளிலும் சோதனை நடந்தது. மொத்தம் 7 இடங்களில் நடந்த இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வருமான வரித்துறை சோதனை நடத்தியது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News