செய்திகள்
சுடுதண்ணீரில் தவறி விழுந்து 2½ வயது ஆண் குழந்தை பலி
புதுச்சேரி அருகே சுடுதண்ணீரில் தவறி விழுந்து 2½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்து போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
முருங்கப்பாக்கம் துலுக் கானத்தம்மன் நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரகு. இவர்தேங்காய்திட்டில் சொந்தமாக கார் பெயிண்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி தமிழ் செல்வி.இவர்களது 2½ வயது ஆண் குழந்தை யாதவ் சம்பவத்தன்று தமிழ்செல்வி குடிப்பதற்காக சிறிய பாத்திரத்தில் சுடு தண்ணீரை காய்ச்சி வீட்டு வராண்டாவில் வைத்திருந்தார்.
அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை யாதவ் சுடு தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டான். இதில், உடல் முழுவதும் வெந்து யாதவ் துடிதுடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ் செல்வி உடனடியாக குழந்தையை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
இதுகுறித்து ரகு கொடுத்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.