வாணரப்பேட்டையில் தனியார் நிறுவன மானேஜரின் கார் உடைப்பு
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை அலைன் வீதியை சேர்ந்தவர் ரவிகுமார் (வயது 46). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு வீட்டில் தூங்கினார். நள்ளிரவு திடீரென கார் உடைக்கும் சத்தம் கேட்டு ரவிகுமார் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது 2 பேர் காரின் பின் பக்க கண்ணாடி, வலது பக்க கண்ணாடி மற்றும் கார் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வதை கண்டு ரவிகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் விசாரித்த போது கார் கண்ணாடியை உடைத்தவர்கள் வாணரப்பேட்டை சித்தி விநாயகர் வீதியை சேர்ந்த அமரேஷ் மற்றும் முதலியார் பேட்டையை சேர்ந்த ஜெயராமன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரவிகுமார் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர்கள் குறித்து முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அமரேஷ் மற்றும் ஜெயராமன் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.