செய்திகள்
கொலை

தேவகோட்டையில் டிரைவர் கொடூரக்கொலை

Published On 2021-03-19 06:55 GMT   |   Update On 2021-03-19 06:55 GMT
தேவகோட்டையில் டிரைவர் கொடூரக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சரஸ்வதி வாசக சாலை வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி.

இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கார்த்திக் (வயது 45).திருமணமாகாத இவர், வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கார்த்திக் வீடு திரும்பவில்லை. அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.

இதற்கிடையே இன்று காலை சிலம்பணி ஊரணியில் வாலிபர் பிணம் கிடப்பதாக தேவகோட்டை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயங்களுடன் காணப்பட்ட உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது கார்த்திக் என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த அவர்கள், மகனின் உடலை பார்த்ததும் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கொன்று உடலை ஊரணியில் வீசிச் சென்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான கார்த்திக்குக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அய்யனார், கார்த்திக் வீட்டுக்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. எனவே இந்த சந்தேகத்தின் அடிப்படையில் அய்யனாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News