செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல்- அதிகாரி தகவல்

Published On 2021-03-15 16:36 IST   |   Update On 2021-03-15 16:36:00 IST
குன்னம் சட்டமன்ற தொகுதியில் 38 இடங்களில் உள்ள 96 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஸ்ரீவெங்கடபிரியா, குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் வாகன சோதனை நடைபெற்றதை பார்வையிட்டார். பின்னர் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களையும், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையிடும் இடத்தினையும், இளம் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து தரும் முகாமையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் வசதி, சாய்தள வசதி, காற்றோட்ட வசதி ஆகியவற்றை பார்வையிட்டு பழுதடைந்த இடங்களை உடனடியாக சரிசெய்திட உத்தரவிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், பெரம்பலூர்(தனி) தொகுதியில் 39 இடங்களில் 79 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாகவும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 38 இடங்களில் உள்ள 96 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாகவும் என மாவட்டத்தில் 175 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன. பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட அனைத்துவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கவும், மத்திய அரசின் துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள், நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்களது முன்னிலையிலும் போலீசாரின் கூடுதல் பாதுகாப்புடனும் தேர்தல் நடத்தப்படும். குன்னம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றிடவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்ட விதிமீறல்களை கண்காணித்து தடுத்திடும் பொருட்டும், சுழற்சி முறையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, குன்னம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர், போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், உதவி தேர்தல் அலுவலர் குமரைய்யா உள்பட பலர் உடனிருந்தனர்.

Similar News