செய்திகள்
சீர்காழி அருகே சந்தவெளி என்ற இடத்தில் விற்பனைக்கு தயாராக உள்ள சாமி சிலைகளை படத்தில் காணலாம்

சாமி சிலைகளை வடிவமைக்கும் சிற்பிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை

Published On 2021-03-15 13:13 IST   |   Update On 2021-03-15 13:13:00 IST
சாமி சிலைகள் வடிவமைக்கும் சிற்பிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:

சீர்காழி அருகே மயிலாடுதுறை சாலையில் வைத்தீஸ்வரன் கோவில் சந்தவெளி என்ற இடத்தில் ஓலை கொட்டகைக்குள் கருங்கல்லில் இருந்து கலைநயத்துடன் தத்துரூபமாக முருகன், வள்ளி, தெய்வானை, விநாயகர், நடராஜர், சாய்பாபா, முனீஸ்வரர், அம்பாள், வீரனார் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் ஒரு அடி முதல் 4 அடி வரை சிற்பிகள் வடிவமைத்து வருகிறார்கள்.

கலை நயத்துடன் வடிவமைத்து வரும் சிலைகளை அந்த வழியாக செல்பவர்கள் நின்று பார்த்துவிட்டுத்தான் செல்வர்.

இதுகுறித்து சிற்பி ஒருவர் கூறுகையில் சாமி சிலைகளை வடிவமைப்பதற்கு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்ற ஊரில் இருந்து கருங்கற்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு, ஆர்டரின் பெயரில் ஒரு அடி முதல் 4 அடி வரை பல்வேறு சாமி சிலைகள் உருவாக்கி தருகிறோம்.

ஒரு அடி சாமி சிலைகள் செய்வதற்கு இரண்டு நாட்கள் ஆகும். இதற்கு கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது. எங்கள் தொழில் மேலும் சிறப்படைய மானியத்துடன் அரசு கடனுதவி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் இந்த தொழில் மேலும் வளர்ச்சி அடையும். சிலைகள் செய்ய கருப்பு கருங்கல் கூடுதல் விலை கொடுத்து கொண்டுவர வேண்டியது உள்ளது.

எனவே போதிய நிதி உதவி எங்களிடம் இல்லாததால் பக்தர்களுக்கு உரிய நேரத்தில் சாமி சிலைகளை வடிவமைத்து கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அரசு எங்களை போன்ற சிற்பிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Similar News