செய்திகள்
புதுவையில் 15 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று- முதியவர் பலி
புதுவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 15 பேருக்கு தொற்று உறுதியானது. 15 பேர் குணமடைந்தனர். இதுவரை 6 லட்சத்து 45 ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரத்து 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 190 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 169 பேர் குணமடைந்துள்ளனர்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் புதுவையில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 464 பேர், முன்கள பணியாளர்கள் 386 பேர், பொதுமக்கள் 828 பேர் என மொத்தம் 1,678 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. புதுவையில் ஒட்டுமொத்தமாக 21 ஆயிரத்து 165 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.