செய்திகள்
துப்புரவு பணிக்கு சென்றபோது வாகனம் கவிழ்ந்து விபத்து- 12 பேர் காயம்
அந்தியூரில் துப்புரவு பணிக்கு சென்றபோது பேரூராட்சி பேட்டரி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 தூய்மை பணியாளர்கள் காயம் அடைந்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள ஊராட்சி பச்சாபாளையம். இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி அந்தியூர் பெரியார் நகர். இங்கு துப்புரவு பணி மேற்கொள்வதற்காக 7 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 12 தூய்மை பணியாளர்கள் ஊராட்சிக்கு சொந்தமான பேட்டரி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அந்தியூர் பெரிய ஏரிக்கடை அருகே சென்றபோது பேட்டரி வாகனம் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பச்சாபாளையத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 53), கொல்லம்பாளையத்தை சேர்ந்த ராஜி (57), குப்பன் (60), விஜயலட்சுமி உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று காயம் அடைந்த 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த 2 பேரும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மீதம் உள்ள 10 பேரும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.