செய்திகள்
கோப்புபடம்

சத்தியமங்கலத்தில் ஓட்டல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது

Published On 2021-03-13 18:08 GMT   |   Update On 2021-03-13 18:08 GMT
சத்தியமங்கலத்தில் ஓட்டல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் அருகே கடந்த மாதம் 21-ந் தேதி வாலிபர் ஒருவர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ‘அவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் மகன் ஓட்டல் தொழிலாளியான அப்துல் ரசாக் (வயது 20)’ என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலையாளிைய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த விமல் (31) என்பதும், அவர்தான் அப்துல் ரசாக்கை கொன்றதும்,’ தெரியவந்தது.

தகாத வார்த்தையால் திட்டினார்

இதைத்தொடர்ந்து போலீசாரிடம் விமல் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:-

நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். எந்த பகுதிக்கு செல்கிறேனோ அந்த பகுதியில் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு அங்கேயே தங்கி கொள்வேன். கொலை நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு சத்தியமங்கலம் வந்தேன்.

சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நிற்பவர்களிடம் பணத்தை திருடி மது குடித்து அங்கேயே சுற்றித்திரிந்தேன். இதேபோல் கடந்த 20-ந் தேதி இரவு சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஒருவரிடம் ரூ.200 மற்றும் கருப்பு நிற பை ஆகியவற்றை திருடியதுடன், மது குடித்துவிட்டு அங்குள்ள வரசித்தி விநாயகர் கோவிலுக்கு வந்தேன். அங்கு கோவில் பகுதியில் படுத்துகிடந்த அப்துல் ரசாக்கிடம் திருட முற்பட்டபோது, அவர் விழித்துக்கொண்டார். உடனே அவர் என்ைன தகாத வார்த்தையால் திட்டினார்.

இதனால் நான் வேறு இடத்துக்கு சென்று படுத்துக்கொண்டேன். மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் எழுந்து மீதம் இருந்த மதுவை குடித்தேன். என்னை தகாத வார்த்தையால் திட்டிய அப்துல் ரசாக் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி என்னை கண்டுபிடித்துவிட்டனர்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து விமலை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News