செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே விபத்து: தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியர் பலி
கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட விபத்தில் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 37). இவர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் மேம்பாலத்தில் அவர் சென்ற போது ரோந்து வாகனம் பழுதானது. இதையடுத்து அவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் மீட்பு வாகனத்தை வரவழைத்தனர்.
அப்போது மீட்பு வாகனத்தையும், ரோந்து வாகனத்தையும் கருணாகரன் இணைத்து கொண்டிருந்த போது, மீட்பு வாகனத்தின் ஓட்டுனர் எதிர்பாராத விதமாக ஓட்டினார்கள். இதனால் வாகனங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கருணாகரன் மீது மீட்பு வாகனம் ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருணாகரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.