செய்திகள்
கோப்புபடம்

வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி 2 பேர் பலி - பெங்களூருவை சேர்ந்தவர்கள்

Published On 2021-03-13 16:58 IST   |   Update On 2021-03-13 16:58:00 IST
வேளாங்கண்ணியில் பெங்களூருவை சேர்ந்த 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:

கர்நாடக மாநிலம் பெங்களூரு அம்பேத்கர் சிலம் பேசன்டவுன் நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). கூலி தொழிலாளி. இவா் தனது மனைவி சரிதா, மகன் பரத் (17). உறவினர் மகன் தீபக் (17) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 12 பேருடன் கடந்த 10-ந்தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தீபக் மற்றும் பரத் ஆகிய இருவரும் வேளாங்கண்ணி கடலில் குளித்து கொண்டிருந்தனர்.. அப்போது ராட்சத அலையில் சிக்கிய 2 பேரும் கடலில் மூழ்கினர். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடலில் தேடினர். இதில் பரத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து தீபக்கை தேடும் பணியில் போலீசார் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் தீபக் பிணமாக கரை ஒதுங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வேளாங்கண்ணி மற்றும் கீழையூர் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News