செய்திகள்
கைது

வேளாங்கண்ணி அருகே பதுக்கி வைத்திருந்த 220 லிட்டர் சாராயம் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2021-03-12 21:49 IST   |   Update On 2021-03-12 21:49:00 IST
வேளாங்கண்ணி அருகே பதுக்கி வைத்திருந்த 220 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது பிரதாபராமபுரம் கோவில் தெருவில் ஒரு பகுதியில் உள்ள புதரில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடந்து அங்கிருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சாராயத்தை பதுக்கி வைத்தது மேலஈசனூர் பகுதியை சேர்ந்த அம்பேத்கார் (வயது 40) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தனர். அதேபோல் கீழையூர் அருகே மணக்குடி செல்லும் சாலையோரத்தில் மறைத்து வைத்திருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து புலிவலம் திருவாசல் பகுதியைச் சேர்ந்த பாலு மகன் சின்னான் (21) என்பவரை கைது செய்தனர்.

Similar News