செய்திகள்
ராமதாஸ்

கல்பாக்கம் பகுதியில் உள்ள 14 கிராமங்களுக்கு விதித்த நிலப்பதிவு தடையை நீக்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-03-03 08:04 GMT   |   Update On 2021-03-03 08:04 GMT
கல்பாக்கம் பகுதியில் உள்ள 14 கிராமங்களுக்கு விதித்த நிலப்பதிவு தடையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ கூடாது என்றும், அப்பகுதியில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்நடவடிக்கை அந்த கிராமங்களில் வாழும் மக்களின் பொருளாதாரத்தை முடக்கும் என்பதால் இதை ஏற்கவே முடியாது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணுமின்நிலையம் அமைந்துள்ளது. அந்த அணுமின்நிலையத்தைச் சுற்றிலும் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், கல்பாக்கம், மணமை, குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமைப்பாக்கம், நெல்லுர், விட்டிலாபுரம் ஆகிய 14 கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன; பல்லாயிரக்கணக்கான வீட்டு மனைகளும் உள்ளன. இந்த மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரம் சார்ந்த நிகழ்வுகளும் சரியாக சென்று கொண்டிருந்த சூழலில் தான், இந்த 14 கிராமங்களிலும் உள்ள எந்த வகை நிலங்களையும் பத்திரப் பதிவு செய்வதற்கு மத்திய அரசு தடையாணை பிறப்பித்துள்ளது.

அணுமின்நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அது உண்மை என்றால், 14 கிராமங்களில் நிலங்களை வாங்கவும், விற்கவும் கதிர்வீச்சு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி தடை விதிப்பது பெருந்தவறு ஆகும்.

மத்திய அரசால் பத்திரப் பதிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 14 கிராமங்களில் வாழ்பவர்களும், நிலம் வைத்திருப்பவர்களும் கோடீஸ்வரர்களோ, நிலச்சு வான்தாரர்களோ அல்ல. அவர்கள் மிகச்சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆவர்.

அவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக பெரிதும் நம்பியிருப்பது நிலங்களைத் தான். நிலங்களை விற்றுத் தான் தங்கள் குடும்பத்தின் செலவுகளை சமாளித்து வந்தனர். இத்தகைய சூழலில் நிலங்களை விற்பனை செய்ய தடை விதித்திருப்பதன் மூலம், அந்த மக்கள் மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர். இதை சரி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

எனவே, கல்பாக்கம் பகுதியில் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்க வேண்டும். அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையையும் மத்திய அரசு போக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News