செய்திகள்
தற்கொலை

கூடங்குளம் அணுமின் நிலைய மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-02-26 01:05 GMT   |   Update On 2021-02-26 01:05 GMT
கிருஷ்ணகிரி அருகே கூடங்குளம் அணுமின் நிலைய மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் சிவராஜ் (வயது 29). இவர் கூடங்குளம் அணுமின் நிலைய பிளாண்ட் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் சிவராஜ் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையவில்லை.

எனவே இது அதிகாரிகளுக்கு தெரிந்தால் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என சிவராஜூக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் நேற்று முன்தினம் தெரிவித்தாராம்.

இதனால் செய்வது அறியாமல் திகைத்து போன சிவராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை நாராயணன் கொடுத்த புகாரின்பேரில், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து, சிவராஜின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News